×

விடுதலை புலிகளிடம் இருந்து சீமான் பெயரில் தனியாக சாட்டை துரைமுருகன் பல கோடி நிதி பெற்றது உறுதியானது: கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் என்ஐஏ சோதனையில் அம்பலம்

சென்னை: சீமான் பெயரை சொல்லி வெளிநாடுகளில் இருந்து சாட்டை துரைமுருகன் தன்னிச்சையாக, விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றதும், நாம் தமிழர் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் என்ஐஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள்அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்ஐஏ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணபரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியபடி, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாதக தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார்(33), நாதக மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி(33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் மெமரி கார்டுகள், 4 பென் டிரைவ்கள், விடுதலை புலிகளின் மற்றும் அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பறிமுதல் செய்தனர். என்ஐஏ அதிகாரிகள் இந்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி பெற்றது, தமிழகத்தில் ஆயுதப்புரட்சிக்கு தனியாக ஆட்களை திரட்டியது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றது உறுதியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளர் சாட்டை துரைமுருகன், ஆயுதப்புரட்சிக்கு தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து பெறுவது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை, தவறாக பயன்படுத்தி, அவருக்கு தெரியாமல் தடை செய்யப்பட்ட செல்போன் செயலிகள் மூலம் தன்னிச்சையாக வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்புகளிடம் பேசி, ‘மீண்டும் ஈழத்தில் புரட்சி செய்வோம்….

உதவி செய்யுங்கள் என்று கூறி…..’ பல கோடி ரூபாய் நிதியை சட்டவிரோதமாக பெற்றது சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சீமான் பெயரை பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சி நிதி என விடுதலை புலி அமைப்புகளிடம் பெற்ற நிதியில் குறிப்பிட்ட தொகையை கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு, பெரும் நிதியை சாட்டை துரைமுருகன் அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

அதோடு தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி பெற்ற விவகாரத்தில், சீமானை சிக்க வைத்து கட்சியை சாட்டை துரைமுருகன் கைப்பற்ற திரைமறைவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டதும், கட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றால், இரண்டாம் கட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து சீமானுக்கு எதிராக விடுதலை புலிகளின் முழு ஆதரவுடன் கட்சியை உடைத்து தனி அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததற்கான ஆவணங்கள், லேப்டாப் மற்றும் பென் டிரைவுகளில் இருந்துள்ளது. வெடிபொருட்கள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சாட்டை துரைமுருகன் முயற்சியில் ஈடுபட்டதும், அதற்கு துணையாக கபிலர்(எ)கபிலன் என்பவரும் இருந்தது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சீமானுக்கு தெரியாமல் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் மற்றும் தமிழகத்தில் ஆயுதபுரட்சிக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டிய சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சோதனையில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், மேலும் நாதக முக்கிய நிர்வாகிகள் சிலரை கைது செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லியில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். தடைசெய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி திரட்டி நாம் தமிழர் கட்சியை பிளவுபடுத்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், சீமானுக்கு தெரியாமல் ஈடுபட்டது நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விடுதலை புலிகளிடம் இருந்து சீமான் பெயரில் தனியாக சாட்டை துரைமுருகன் பல கோடி நிதி பெற்றது உறுதியானது: கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் என்ஐஏ சோதனையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chattay Durai Murugan ,LTTE ,Seeman ,NIA ,CHENNAI ,Chattay Duraimurugan ,Tamil Nadu Party ,Dinakaran ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....