×

பழனிகோயிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை இந்துக்கள் யார் என்பதை நீதிபதி விளக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

விழுப்புரம்: பழனி முருகன் கோயிலுக்கு இந்துக்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ள நீதிபதி இந்துக்கள் யார் என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ரவிக்குமார் எம்.பி., முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில், முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது: நாட்டில் படிப்பவர்களை பார்த்து அச்சப்படும் கூட்டம் இருக்கிறது. பள்ளிவாசலை இடித்து கோயில் கட்டுகிறார்கள்.

நாட்டில் இன்றைக்கு ராமர் கோயில் கட்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு சொத்து என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. ஆனால் ஆவணம் இல்லாமல் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. மக்கள் அரசியல் சட்டத்தை படிக்க வேண்டும். ஜனநாயகம் இன்றைக்கு கடுமையான சூழலில் உள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் சூழல் உள்ள நிலையில் அதுகுறித்து மக்கள் கவலைப்படுவதில்லை. பால ராமர் செய்தவராலேயே இனிமேல் அந்த சிலையை தொட முடியாது. அதற்கு காரணம் வருனாசிரமம்.

சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினை தலையை சீவவேண்டும் என பேசினார்கள். இந்து தான் கோயிலுக்கு செல்ல முடியும் என்கிறார்கள். அப்படியென்றால் யார் இந்து?. படிப்பதன் மூலம் அறியாமையை மட்டுமல்ல மதத்தையும் விரட்ட முடியும். பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அப்படியென்றால் இந்துக்கள் யார் என்று அந்த நீதிபதி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பழனிகோயிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை இந்துக்கள் யார் என்பதை நீதிபதி விளக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Former Justice ,Chanduru ,Villupuram ,High ,Court ,Hindus ,Palani Murugan temple ,Palanik temple ,Former ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...