×

3 வயது பேத்தியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா

வந்தவாசி, பிப்.4: வந்தவாசி அருகே 2 மனைவிகள் இறந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த 3 வயது பேத்தியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தற்கொலைக்கு முயன்று தப்பி ஓடி தலைமறைவான தாத்தாவை 3 மாதத்திற்கு பிறகு போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(55), கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி சென்னையில் உள்ள மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். முருகேசனுடன் கிராமத்தில் 2வது மனைவி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் முதல் மனைவி கடந்த 3 வருடத்திற்கு முன்பும், 2வது மனைவி கடந்த 4 மாதத்திற்கு முன்பும் உயிரிழந்தனர். முதல் மனைவிக்கு 3 ஆண் மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதில் கடைசி மகன் சென்னையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது மகனும், மருமகளும் 3 வயது மகளை தாத்தா முருகேசனிடம் விட்டுவிட்டு வந்தவாசிக்கு சென்றுள்ளனர். பின்னர், வந்து பார்த்தபோது சிறுமி அழுதபடி உடல் சோர்வாக இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை வந்தவாசி அரசு மருந்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த சம்பவத்தில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் முருகேசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, சிகிச்சை ெபற்று வந்த முருகேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர், மாவட்ட சமூக நலத்துறையினர் அறிவுத்தலின் பேரில் சிறுமியின் தாய் வந்தவாசி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முருகேசன் மழையூர் கூட்ரோட்டில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற முருகேசனை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகேசன் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் செந்தில்குமார் உத்தரவின்பேரில் முருகேசன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post 3 வயது பேத்தியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா appeared first on Dinakaran.

Tags : Vandawasi ,Wandwasi ,
× RELATED பணத்தை திரும்ப தரக்கோரி முகவர்கள்...