தென்காசி, பிப்.3: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை (4ம் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் நாளை (4ம் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தென்காசி, சங்கரன்கோவில் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் appeared first on Dinakaran.