×

பண்ருட்டி முந்திரி நிறுவனத்தில் திருட்டு சிறுவன் உள்பட 4 பேர் அதிரடி கைது போலீசார், மோப்ப நாய் கூப்பருக்கு பாராட்டு

பண்ருட்டி, பிப். 3: பண்ருட்டி முந்திரி நிறுவன திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்என்புரம் சென்னை சாலையில் காங். மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இரவு நிறுவனத்துக்கு வந்த மர்ம நபர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து கம்பெனிக்குள் புகுந்து மேஜையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் 3 வாலிபர்கள் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் கடலூரில் இருந்து வந்த மோப்ப நாய் கூப்பர் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு மாளிகைமேடு ஏரி பாளையம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி ஒரு வீட்டின் முன் நின்றது. இதனால் போலீசார் அந்த வீட்டில் இருந்தவர்களை பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், காங்கிரஸ் மூத்த தலைவரின் முந்திரி நிறுவனத்தில் பணத்தை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் அந்த கும்பலில் ஒருவனை பிடித்து விசாரணை நடத்தியதையடுத்து, மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்தனர். தீவிர விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜவேலு(30), இவரது சகோதரர் சக்திவேலு(25), இவர்களது 16 வயது தம்பி, மற்றும் மச்சான் மணிகண்டன்(22) என்பதும், இவர்கள் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஏரிப்பாளையத்தையில் தங்கி இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட நான்கு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பண்ருட்டியில் நடந்த இந்த திருட்டில் மோப்பநாய் உதவியுடன் ஆறு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த பண்ருட்டி போலீசாரை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்பி ஆகியோர் பாராட்டினார்.

The post பண்ருட்டி முந்திரி நிறுவனத்தில் திருட்டு சிறுவன் உள்பட 4 பேர் அதிரடி கைது போலீசார், மோப்ப நாய் கூப்பருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Panrutti Cashew ,Cooper ,Panruti ,Panrutti Mundhri ,Cuddalore District ,Banruti ,Lnpuram ,Chennai Road Cong ,EVKS ,Elangovan ,Panrutti ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு