×

உடல் உறுப்புகள் தானம் செய்த காவலாளிக்கு அரசு மரியாதை

 

தண்டையார்பேட்டை, பிப்.3: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தனசேகர் (57). சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவர், தனது வீட்டில் தவறி விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, தனசேகர் குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் அவரது 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருந்த அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

உடலுறுப்பு தானம் செய்த தனசேகருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று தமிழக அரசு சார்பில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, கோட்டாட்சியர் இப்ராஹிம், மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

The post உடல் உறுப்புகள் தானம் செய்த காவலாளிக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Dhanasekar ,Puduvannarpet ,Stanley Government Hospital ,Chennai ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...