இடைப்பாடி, பிப்.3: வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகளை கண்டுகொள்ளாமல் ஊழியர்களை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் உயரதிகாரிகளை கண்டித்து விவசாயி உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் சங்க ஊழியர்களை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் உயரதிகாரியை கண்டித்து விவசாயிகள் சார்பில், வரும் 7ம் தேதி(புதன்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திலும் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை இணைப்பதிவாளர் ரவிக்குமார், துணை பதிவாளர் பரமசிவம் ஆகியோர் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தற்போது, முன்னாள் தலைவர் சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 7 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். டெபாசிட் தொகை கையாடல், நகை கடனில் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி, விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.