×

அண்ணா சாலையில் பரபரப்பு ரூட் தல பிரச்னையில் மாணவர்கள் மோதல்: பீர் பாட்டிலால் தாக்கியதில் 3 பேர் மண்டை உடைந்தது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் (தடம் எண்.2ஏ) மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று காலை பயணம் செய்தனர். இந்த பேருந்து அண்ணா சாலையில் உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் வந்தபோது, அங்கு பைக்குகளில் நின்று கொண்டிருந்த புதுக்கல்லூரி மாணவர்கள் ‘இந்த ரூட்டில் நாங்கள் தான் தல’ என்று கூறி, பேருந்தில் இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு புதுக்கல்லூரி மாணவர்களை தாக்கினர். ஒரு கட்டத்தில் இரு தரப்பு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் பீர் பாட்டிலை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரியில் படித்து வரும் ராஜேஷ், மோகன்ராஜ், சிவபதி ஆகிய 3 பேர் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதை பார்த்த புதுக்கல்லூரி மாணவர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினர்.

பின்னர் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரியை சேர்ந்த சரண், சிவா, சூர்யா, கணேஷ்குமார், விஷ்ணு, முகேஷ், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் உட்பட 12 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ரூட் தல பிரச்னையில் இந்த மோதல் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காயமடைந்த மாநில கல்லூரி மாணவர்களான ராஜேஷ், மோகன்ராஜ், சிவபதி ஆகியோரை போலீசார் மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவுகள் மூலம் தப்பி ஓடிய புதுக்கல்லூரி மாணவர்கள் 15 பேரை தேடி வருகின்றனர்.

 

The post அண்ணா சாலையில் பரபரப்பு ரூட் தல பிரச்னையில் மாணவர்கள் மோதல்: பீர் பாட்டிலால் தாக்கியதில் 3 பேர் மண்டை உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Anna Road ,Chennai ,State College ,Chennai Central Railway Station ,City ,Bus ,
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...