புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசிக்கொண்டு இருந்த போது, பெரும்பான்மை பலம் தற்போது இருந்தும் இப்போது வரை மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தாததையும், இனிமேல் எப்போது அமல்படுத்துவீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில்,’உங்களுக்கு( பா.ஜ அரசுக்கு) தற்போது 330, 334 இடங்கள் மெஜாரிட்டி உள்ளது. இனி 400 இடங்களை தாண்டிவரும் என்கிறீர்கள்’ என்று பேசிக்கொண்டு இருந்த போது அவையில் இருந்த பா.ஜ கூட்டணி எம்பிக்கள் வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாக கோஷமிட்டனர். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அப்போது அவையில் இருந்த பிரதமர் மோடியும் வாய்விட்டு சிரித்தார்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்,அவைத்தலைவர் ஜெகதீப் தன்கரும் சிரித்துவிட்டனர். சிரிப்பலைக்கு மத்தியில், அமைச்சர் கோயல் எழுந்து, ‘இன்று, கார்கே ஜி இறுதியாக உண்மையைச் சொன்னார், உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை’ என்றார். கோயலின் பேச்சுக்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், ‘எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை இவ்வளவு பாராட்டியதில்லை என்று நான் நினைக்கிறேன், இது ஒரு சாதனை. உங்கள் (கார்கே) பேச்சு பாராட்டப்படுகிறது’என்றார். அதற்கு பதிலளித்த கார்கே,’அதை ஏன் புகழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் (பாஜ) 400 சீட் அல்லது 500 சீட்களைப் பெறுவோம் என்று எக்காளம் செய்கிறார்கள்’ என்றார். இதனால் அவை சிரிப்பலையில் மிதந்தது.
The post இனி 400 சீட் கிடைக்கும் கார்கே பேச்சால் சிரித்த மோடி appeared first on Dinakaran.