×

ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு

அலகாபாத்: நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் நேற்று முதல் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னர் இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கியது. மேலும் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் நேற்று முதல் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்ய தொடங்கினார்.

இந்நிலையில், ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதன் எதிரொலியாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகரங்களான டால்மண்டி, நை சதக், நடேசர் மற்றும் அர்டல் பஜார் பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தொழுகைக்காக ஞானவாபி மசூதி வளாகத்தில் குவிந்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் குவிப்பால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

 

The post ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandh ,Varanasi ,Gnanawabi Masjid ,Allahabad ,Kashi Vishwanath Temple ,Gnanavabi Masjid ,Varanasi, Uttar Pradesh ,Mughalaya… ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை