×

சொத்து விற்ற பணத்தை பங்கிடுவதில் தகராறு இரும்பு கம்பியால் அடித்து தம்பி கொலை; அண்ணன் கைது: மாதவரத்தில் பயங்கரம்

திருவொற்றியூர்: மாதவரத்தில் சொத்து விற்ற பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். சென்னை, மாதவரம், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரோசு. இவர்களுக்கு நரேஷ்குமார் (33), விக்னேஷ் குமார் (30) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஸ்கர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ரோசு, மாதவரம் பாண்டியன் தெருவில் உள்ள தனது சகோதரன் வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடி மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள குடும்ப சொத்தை நரேஷ்குமாரும், விக்னேஷ் குமாரும் அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்து அதற்கான முன்பணமும் பெற்றனர்.

இன்று மீதமுள்ள பணத்தை வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் அந்த பணத்தை பகிர்த்து கொள்வதில் அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை விக்னேஷ்குமார், அம்பேத்கர் நகரில் இருந்து சவாரி ஏற்ற ஆட்டோவுடன் நின்றிருந்தார். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த நரேஷ்குமார், ‘எனக்கு சொத்தில் அதிகமாக பணம் வேண்டும்’ என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு விக்னேஷ்குமார், ‘நாம் சரிசமமாகத்தான் பிரித்து கொள்ள வேண்டும், அதிகமாக எடுத்து கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நரேஷ்குமார், ஆட்டோவில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து விக்னேஷ் குமாரின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயத்துடன் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விக்னேஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி்னும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்கு பதிவு செய்து நரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட விக்னேஷ் குமாருக்கு வாசுகி என்ற மனைவியும், புவிஷா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.

The post சொத்து விற்ற பணத்தை பங்கிடுவதில் தகராறு இரும்பு கம்பியால் அடித்து தம்பி கொலை; அண்ணன் கைது: மாதவரத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Annan ,Madhavaram ,Tiruvottiyur ,Bhaskar ,2nd Cross Street, Ambedkar Nagar, Madhavaram, Chennai ,Panic ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...