×

3 சிறுமிகளுக்கு திருமணம் புது மாப்பிள்ளைகள் உள்பட 7 பேர் மீது வழக்கு

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகளுக்கு திருமணம் நடந்தது தொடர்பாக, 3 புதுமாப்பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காட்டில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக நெல்லை மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து களக்காடு யூனியன் ஊர் நல அலுவலர் ராஜாத்தி குஞ்சிதபாதம்(52) மற்றும் ஊழியர்கள் புகார் வந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் அதற்குள் சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய வாலிபருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தருவையை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் 16 வயது சிறுமியை கடந்த 9-6-2023ல் சாத்தான்குளம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். தற்போது அச்சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து ஊர்நல அலுவலர் அபிஷேக ராணி (56) அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளையான தருவையை சேர்ந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திசையன்விளையை சேர்ந்த ஒரு 21 வயது வாலிபர், ராதாபுரத்தில் 17 வயது சிறுமியை கடந்த 30ம் தேதி திருமணம் செய்துள்ளார். இது குறித்து ராதாபுரம் ஊர் நல அலுவலர் சுசீலா அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார், புதுமாப்பிள்ளையான 21 வயது வாலிபர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 சிறுமிகளுக்கு திருமணம் புது மாப்பிள்ளைகள் உள்பட 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai district ,Nellai District, ,Kalakkad ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்