×

மஞ்சூர் அருகே தொழுவத்திற்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை

மஞ்சூர்: மஞ்சூர் அருகே தொழுவத்திற்குள் புகுந்து கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தொட்டகம்பை சேரனுார். இப்பகுதியில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவர் ஆடு, மாடுகளை சொந்தமாக வைத்து வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகிலேயே கால்நடைகளை இரவு நேரங்களில் அடைத்து வைக்கும் தொழுவம் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சுப்ரமணி மாலை மீண்டும் அவைகளை தொழுவத்தில் அடைத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை ஒன்று மெதுவாக தொழுவத்திற்குள் புகுந்தது.

தொடர்ந்து அங்கிருந்த ஆட்டு குட்டியின் மீது பாய்ந்து அதை தாக்க முற்பட்டது. அப்போது தொழுவத்திற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டதை தொடர்ந்து, ஆட்டுக்குட்டியை விட்டு சிறுத்தை வேகமாக வெளியேறி சென்றுவிட்டது. இந்நிலையில் மறுநாள் காலை தொழுவத்தில் படுகாயத்துடன் கிடந்த ஆட்டுக்குட்டியை கண்ட சுப்ரமணி அதை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் ஆட்டு குட்டியை தாக்கியது சிறுத்தை என உறுதி செய்ததை தொடர்ந்து பழுதடைந்து காணப்பட்ட தொழுவத்தின் கதவுகளை சீரமைத்துள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை தொழுவத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்ததுடன் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியின் மீது பாய்ந்து அதை கடித்து குதறியது. சிறுத்தையின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து கன்றுக்குட்டியின் ரத்தத்தை ருசித்த சிறுத்தை பின்னர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் உத்தரவின் பேரில் நேற்று வனவர் சுரேஷ்குமார், வனக்காப்பாளர் வினோத் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று சிறுத்தையால் உயிரிழந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டு விசாரனை நடத்தினர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு கன்றுக்குட்டிக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. தொழுவத்தின் கதவுகளை உடைத்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மஞ்சூர் அருகே தொழுவத்திற்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manjoor ,Thottagambai Cheranur ,Nilgiris district ,Subramani ,Cheetah ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை