×

இலகுரக வாகனங்கள் சென்று வந்த நிலையில் ஒழுகினசேரி ரயில்வே பாலம் பேரிகார்டு வைத்து மூடல்: பில்லர் அமைக்கும் பணிகள் தீவிரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணி வேகமாக நடந்து வருகிறது. நாகர்கோவில் திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்து உள்ளன. சோதனை ஓட்டமும் நடைபெற்று உள்ளது. இந்தநிலையில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதையில் கன்னியாகுமரி நாகர்கோவில் இடையே பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நாகர்கோவில் ஆளூர், குழித்துறை பாறசாலை இடையே பணிகள் நடந்து வருகின்றன.

நில ஆர்ஜித பணிகளையும் விரைந்து முடித்து, இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதன் ஒரு கட்டமாக ஒரு கட்டமாக நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில், நாகர்கோவிலில் நுழைவு வாயில் பகுதியான ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் கட்டும் பணியும், இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. ஏற்கனவே புதிய பால பணிகள் 50 சதவீதம் முடிடைந்துள்ளன. தற்போது ஒழுகினசேரியில் உள்ள பழைய ரயில்வே பாலத்தின் கீழ் கூடுதல் தண்டவாளம் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. இதற்காக நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் ஒழுகினசேரி வழியாக கடந்த 28ம்தேதி முதல் சாலை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், அரசு பஸ்கள் அனைத்தும் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு, எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி சந்திப்பு, புத்தேரி மேம்பாலம் வழியாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை வழியாக அப்டா மார்க்கெட் சந்திப்பை அடைந்து, பின்னர் நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் பயணிக்கின்றன. இந்த போக்குவரத்து மாற்றத்தால் அசம்புரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய பாலப்பணியை முடித்துவிட்டு பழையாலத்தை இடிக்கவேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 20 நாட்களில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 30ம் தேதி முதல் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இலகுரக வாகனங்கள் பைக்குகள் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஒழுகினசேரி பழைய பாலத்தில் 23 பில்லர் தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பழைய பாலத்தின் ஒரு புறம் பில்லர் அமைக்கப்பட்டு வந்த நிலையில் மறுபுறம் பில்லர் அமைக்கவேண்டி பொக்லைன் எந்திரம் கொண்டு மண் அகற்றப்பட்டு, துளையிடம் பணி இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதனால் அந்த வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால அனைத்து வாகனங்களும் பல்வேறு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது. பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்காததால் இலகுரக வாகனங்கள் ஒழுகினசேரி பழையாறு பாலம் வந்து ஆராட்டு சாலையில் செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில்வே தண்டவாளம் செல்வதால், அந்த வழியாக ரயில்கள் வரும்போது ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது.

இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்டவரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆராட்டு ரோடு, புத்தேரி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

The post இலகுரக வாகனங்கள் சென்று வந்த நிலையில் ஒழுகினசேரி ரயில்வே பாலம் பேரிகார்டு வைத்து மூடல்: பில்லர் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Oglukinassery ,Nagercoil ,Kanyakumari ,Thiruvananthapuram ,Tirunelveli ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?