×

சிவகாசி, திருவில்லி.யில் கனமழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

சிவகாசி: திருவில்லிபுத்தூர், சிவகாசி பகுதியில் இன்று அதிகாலை இடியுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால் சிறுகுளம், பெரியகுளம், திருத்தங்கல் செங்குளம் உட்பட மாநகரின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் நிரம்பின. வடகிழக்கு பருவமழை ஓய்ந்த நிலையில் சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவியது. ஆனால், நேற்று இரவு முதல் பனிப்பொழிவு குறைந்து குளிர்ந்த நிலை நிலவியது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கி இடியுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் நகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

திருவில்லிபுத்தூர்: வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் திருவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை இல்லை. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென திருவில்லிபுத்தூர் நகரில் காலை 5 மணி முதல் 8 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதேபோல, சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. ஆரம்பத்தில் சாரல் மலையாக பெய்ய துவங்கிய மழை, பின்னர் பலத்த மழையாக மாறியது. அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்ததால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், மழையின் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் அவதிப்பட்டனர்.

வத்திராயிருப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சில விவசாய கண்மாய்களில் தண்ணீரின் அளவு சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தண்ணீர் பெருகி வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சிவகாசி, திருவில்லி.யில் கனமழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Thiruvilli ,Thiruvilliputhur ,Virudhunagar district ,North ,Sirukulam ,Periyakulam ,Thirutangal ,Senkulam ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து