×

திருப்பங்களை தரும் திருக்குளக்கரை விநாயகர்

ஆலயங்களுக்கு முறையாக வழிபடச் செல்பவர்கள், கோயில் திருக்குளங்களில் நீராடித் திருமேனியைத் தூய்மை செய்துகொண்டு விபூதி அணிந்து பஞ்சாட்ர ஜெபம் செய்த பின்னரே ஆலயத்திற்குள் செல்வது வழக்கம். அன்பர்கள் நீராடித் தூய்மை பெற, ஆலயங்களின் அருகில் தீர்த்தக்குளங்கள், பொய்கைகள், பெருங்கிணறுகளை அமைப்பது வழக்கம். இவ்வகையில் அமைந்த திருக்குளங்களின் கரையில் விநாயகரையும் அமைத்துள்ளனர்.

நீராடிய பின், அன்பர்கள் விபூதி அணிந்துகொள்ள வசதியாக இந்த விநாயகர் முன்பாக விபூதிமடலை வைப்பதும் வழக்கம். இந்தக் குளக்கரை விநாயகரைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரை விளக்குகிறது. ஆலயத்திற்குச் சொந்தமான குளங்களின் கரையில், அரசமரமும் அதனடியில் பிள்ளையாரையும் வைத்து வழிபடுகின்றனர். குளத்தில் நீராடியபின் இந்த விநாயகரை வணங்குவது வழக்கம்.

பெருங்கோயில்களில் அமையும் குளத்தின் கரையில் அரசமரமின்றி விநாயகர் ஆலயங்களை அமைக்கின்றனர். இவரைக் குளக்கரை பிள்ளையார் என்று அழைக்கின்றனர். சில தலங்களிலுள்ள குளக்கரை விநாயகர் வரலாற்றுப் புகழ் பெற்றவராக விளங்குகிறார்.

* திருப்புன்கூர் சிவலோகநாதர் ஆலயக் குளக்கரையில் அமைந்திருக்கும் குளம் வெட்டிய பிள்ளையாரைக் கூறலாம். சோழநாட்டுத் திருத்தலம் திருப்புன்கூர். இது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள சிவலோக நாகநாத சுவாமி ஆலயத்தின் மேற்கில் பெரிய குளமும், அதன் கரையில் விநாயகர் ஆலயமும் உள்ளன. இதிலுள்ள பிள்ளையாரைக் குளம் வெட்டிப் பிள்ளையார் என்றழைக்கின்றனர்.

* திருப்பெருந்துறை ஆலயத்தின் முன்பாக தேவதீர்த்தம் (நெல்லியடி தீர்த்தம்) என்னும் பெரிய திருத்தலம் அமைந்துள்ளது. இதன் வடகரையில் கிழக்கு நோக்கியவாறு வல்லபை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதில் பத்துக் கரங்களுடன் வல்லபையை மடியில் ஏந்தியவாறு விநாயகர் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் பெரியதாக விமானத்துடன் விளங்குகிறது. தல புராணத்தில் இவ்விநாயகர் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளார்.

* சிதம்பரம் சிவகங்கைக் குளத்தின் கரையில், நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

* திருப்பனந்தான் காடிமடத்தில் அமைந்துள்ள குளத்தின் நடுவே விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவரிடம் சென்று வழிபட, பாலம் அமைத்துள்ளனர்.

* சிவன், முருகன், சக்தி ஆலயங்களின் குளக்கரைகளில் மட்டுமின்றி, சில திருமால் கோயில் குளக்கரைகளிலும் விநாயகர் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

* ஸ்ரீவில்லிபுத்தூரின் அருகில் அமைந்திருப்பது, திருவண்ணாமலை ஆகும். இம்மலைமீது கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம் மலையடிவாரத்தில் உள்ளது. இந்த குளக்கரையில் மலை ஏறும் வழியில் மிகப் பெரிய விநாயகர் வீற்றிருக்கிறார்.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post திருப்பங்களை தரும் திருக்குளக்கரை விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Thirukulakkarai ,Ganesha ,Thirumeni ,Tirthakulams ,Poikais ,Thirukkulakarai Vinayakar ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை