சென்னை:பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை ராணி மெய்யம்மை அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, நீட் விலக்கு, மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “டெல்லி குடியரசு தின விழாவில் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் 85 வயதில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வளவோ சாதனை செய்த மருத்துவர் ராமதாஸ்க்கு ‘பாரத ரத்னா’ தரவில்லை என்பது எனக்கு பெரிய வருத்தம் உள்ளது. கர்ப்பூரித் தாக்கூர் அவர்கள் பீகார் முன்னாள் முதல்வர், முடி திருத்துகின்றன சமூதாயத்தைச் சார்ந்தவர், பீகாரில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தவர். அதனால் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
முதலமைச்சராக இருந்து சாதனைகளை செய்வது பெரிய காரியம் கிடையாது. ஆனால் எனக்கு பதவி வேண்டாம், பொறுப்பு வேண்டாம், சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ எனது கால்கள் படாது என்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சாதனை செய்வது தான் உயர்ந்த சாதனை. அதனை ராமதாஸ் செய்து கொண்டு இருக்கிறார். இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே தலைவர் மருத்துவர் ஐயா. திமுக ஆரம்பித்து 18 ஆண்டுகளிலும்.. அதிமுக ஆரம்பித்து 5 ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், பாமக தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, இன்னும் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை எப்போது மாறும்?. 2026ல் பாமக ஆட்சிக்கு வரும் என நம்புகிறோம்,”இவ்வாறு பேசியுள்ளார்.
The post மருத்துவர் ராமதாஸ்க்கு ‘பாரத ரத்னா’ தரவில்லை என்பது எனக்கு பெரிய வருத்தம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.