×

கட்டுக்குள் பணவீக்கம்.. அரசு திட்டங்களால் பெண்கள் பயன்.. அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் : ஒன்றிய பட்ஜெட் 2024

டெல்லி : தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாத அரசு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில்,

“2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2014-ல் பொறுப்பேற்றது.

*கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

*மக்கள் மீண்டும் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம்.

*2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும். பா.ஜ.க. அரசின் இலக்காக சமூகநீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம்.

*25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது. நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது.

*11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

*முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி முறை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்முனைவாராகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 28% உயர்ந்துள்ளது.

*திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

*விளையாட்டுத்துறையில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளனர். 2010-ல் 20-ஆக இருந்த கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

*நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகமாக உள்ளது.
தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள சோதனையான சூழல் உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதும் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாண்டு கடந்து வந்தது.

*இந்தியாவில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோதும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

*சிறு, நடுத்தர குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் போட்டியிடும் வகையில் மேம்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

The post கட்டுக்குள் பணவீக்கம்.. அரசு திட்டங்களால் பெண்கள் பயன்.. அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் : ஒன்றிய பட்ஜெட் 2024 appeared first on Dinakaran.

Tags : Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Pragnyananda ,Tamil Nadu ,EU Government ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு...