×

திருமங்கலம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, பஸ் நிறுத்தம் அமைக்கக்கோரி, இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கீழக்கோட்டை கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதி 5 லட்சம் மூலம் பஸ் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக திருமங்கலம்-காரியாபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள லட்சுமிபுரம் விலக்கில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என ஒரு தனிநபர், பஸ் நிறுத்தம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிகாரிகளால் பணியை தொடங்க முடியவில்லை. மேலும், லட்சுமிபுரம் கிராமத்துக்கான பஸ்நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று காலை திருமங்கலம்-காரியாபட்டி சாலையில் லட்சுமிபுரம் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், திருமங்கலத்திலிருந்து காரியாபட்டி சென்ற டவுன் பஸ் மற்றும் காரியாபட்டியிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த டவுன் பஸ்சையும் சிறை பிடித்தனர். இதனால், காலை வேளையில் பள்ளி கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமிபுரம் கிராம மக்கள் மற்றும் கீழக்கோட்டை பஞ்சாயத்துலைவர் காளம்மாள் தனுஷ்கோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் திருமங்கலம்-காரியாபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திருமங்கலம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumangala ,Tirumangalam ,Tirumangal ,Madurai district ,Thirumangalam ,Kalakkottai village ,Lakshmipuram ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே முன்விரோதத்தில்...