ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் டிப்ளமோ இன்ஜினியர் தூக்கில் பிணமாக தொடங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கீழ்புளியங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலையா, விவசாயி. இவரது மனைவி அமராவதி. இந்த தம்பதிக்கு மனோஜ், பாலாஜி என இரு மகன்கள் இருந்தனர்.
இவர்களில் மனோஜ் வெளியூரில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி பாலாஜி (19) அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியருக்கு படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தார். பாலாஜி பொங்கல் விடுமுறைக்கு வந்துவிட்டு திரும்ப சென்னை சென்றுள்ளார். பின்னர் குடியரசுதின விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான கீழ்புளியங்குடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டைவிட்டு வெளியே சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை பெரியாண்டவர் கோயில் அருகில் உள்ள வேப்பமரத்தில் புடவையில் தூக்குப்போட்டு தொங்கியபடி அவர் பிணமாக கிடந்தார். அவரது இரு கால்களும் தரையை தொட்டபடி இருந்தன. இன்று காலை அவ்வழியே நெல் அறுவடை செய்து கொண்டிருந்த போது அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மதுபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலாஜியை யாராவது அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ஸ்ரீமுஷ்ணம் அருகே காட்டுப்பகுதியில் டிப்ளமா இன்ஜினியர் மர்ம சாவு: கொலையா? : போலீசார் விசாரணை appeared first on Dinakaran.