×

குடந்தையில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்; காரைக்கால் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன், மாணவி பலி: இன்னொருவரை தேடும் பணி தீவிரம்

காரைக்கால்: காரைக்கால் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர், மாணவி இறந்தனர். இன்னொருவரை தேடும் பணி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கும் 13 மாணவ, மாணவிகள் நேற்று காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு கடலில் ஆனந்தமாக குளித்தனர். அப்போது கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மாணவி ஹேமமாலினி (20), திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ரித்தன்யா (18) ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது.

இதை பார்த்ததும், மாணவர்கள் திப்பிராஜபுரம் புகழேந்தி (25), எஸ்.புத்துரை சேர்ந்த அபிலேஷ் (20) மற்றும் வலையப்பேட்டை சேர்ந்த ஜெகதீஷ் (20) ஆகிய 3 பேரும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் கடல் அலையில் மூழ்கினர். பின்னர் கரையில் இருந்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மூலம் புகழேந்தி, ரித்தன்யா மீட்கப்பட்டனர். சிறிது நேரத்தில் ஹேமமாலினி உடல் கரை ஒதுங்கியது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புகழேந்தி, ரித்தன்யா ஆகியோரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அபிலேஷ், ஜெகதீஸ் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அபிலேஷ் உடல் கரை ஒதுங்கியது. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெகதீசை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post குடந்தையில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்; காரைக்கால் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன், மாணவி பலி: இன்னொருவரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kudanta ,karaikal ,Kumbakonam ,BBA ,Kumbakonam Government College of Arts ,Thanjay District ,Kudantai ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...