டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தரையிறங்க முடியாத விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உ.பியின் மீரட்டில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.
தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 50க்கும் அதிகமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக 600 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோல 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து ஜன.21-ம் தேதி டெல்லியில் வானிலை ஓரளவு சீரானது. எனவே விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. ஆனால் தற்போது மூடுபனி நிலவுவதால், மீண்டும் விமான சேவை பாதிக்கபட்டுள்ளது. இன்று டெல்லியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே பனிமூட்டம் ஓரளவு குறையலாம் என நம்பப்படுகிறது.
The post டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் appeared first on Dinakaran.