×

மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்” தொடங்கியது!!

சென்னை: அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்குதடையின்றி விரைவாக மக்களை சென்றடைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திடும் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சி தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் (கிராமத்தில்) தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார்.

மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார். இதனிடையே அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.

The post மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்” தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,CHENNAI ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்