×

அரைவேக்காட்டுதனமாக பேசுவதை கவர்னர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி, காரல் மார்க்ஸ் என தமிழக, இந்திய, உலகு தழுவிய செழுமையான மரபுகளையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. தற்போது வெண்மணி தியாகிகளை குறிவைத்திருக்கிறார். வெண்மணி நினைவகம் என்பது மகத்தான நினைவுச் சின்னம். ‘செங்கொடியை இறக்கு என்ற போதும் உயிர்நீத்தாலும், உயிரிலும் மேலான செங்கொடியை இறக்க மாட்டோம்’ என்று சபதமேற்ற தியாகிகளின் நினைவுச் சுடர் அது. அதனால் தான் ஏழை, எளிய விவசாயத் தொழிலாளிகளும், விவசாயிகளும், கூலித் தொழிலாளிகளும், கருத்தால் உழைக்கும் மக்களும், கம்யூனிச நேசர்களும் தந்த கொடையால் தார்மீக வலுவோடு எழுந்து நிற்கிறது.

இதில் ஏழை குழந்தைகள் தங்கள் உணவில் ஒரு கவளத்தை குறைத்துக் கொண்ட கொடையும் அடங்கியிருக்கிறது. இதைத்தான் கவர்னர் கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். உண்மையில் ஆர்.என்.ரவி போன்ற ஒருவர் அந்த பூமியில் கால் வைத்தது தான் அந்த மகத்தான தியாகிகளை அவமதிக்கும் செயல். தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான சாம்பியன் செங்கொடி இயக்கம் தான். இந்த தியாக வடுக்களை கொண்ட இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதை கவர்னர் ஆர்.என்.ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்னைகளை பற்றி பேசாமல் மவுனம் காப்பதே நல்லது. அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

The post அரைவேக்காட்டுதனமாக பேசுவதை கவர்னர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor ,K. Balakrishnan ,Chennai ,State Secretary of the ,Communist Party ,of ,India ,Ravi ,Tamil Nadu ,Thiruvalluvar ,Vallalar ,Mahatma Gandhi ,Karl Marx ,Venmani ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...