×

அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விரைவாக கிடைக்க ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது: கலெக்டர், அதிகாரிகள் நாள் முழுவதும் கிராமத்தில் தங்கி மக்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை

சென்னை: அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்குதடையின்றி விரைவாக மக்களை சென்றடைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை திறம்பட செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48, புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களுக்காக தீட்டப்பட்டு, அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திடும் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் இன்று (31ம் தேதி) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சி தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் (கிராமத்தில்) தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.

* சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

 

The post அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விரைவாக கிடைக்க ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது: கலெக்டர், அதிகாரிகள் நாள் முழுவதும் கிராமத்தில் தங்கி மக்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...