×

சிவகங்கை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு: விரைவில் தகவல்கள் வெளியிடப்படும்

 

திருப்புத்தூர், ஜன. 30: சிவகங்கை மாவட்டத்தில் ஈர நில மற்றும் வலசை வரும் பறவைகள் குறித்து 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஒத்திசைக்கப்பட்ட ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு சிவகங்கை வனக்கோட்டத்தில் கடந்த இரண்டு தினங்கள் மாவட்ட வன அலுவலர் பிரபா அறிவுறுத்தலின்படி, வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உட்பட 25 ஈரநிலங்களில் இந்த கணக்கெடுப்புப் பணி நடந்தது.

இப்பணியில் வனத்துறை பணியாளர்கள், ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக திருப்புத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த நோக்கம் மற்றும் பயிற்சிகள் ஆகியவையும், கணக்கெடுப்பு பணிக்கு தேவையான கையெடுகள் மற்றும் தொகுப்புகளும் வழங்கப்பட்டது.

மேலும் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் வனத்துறை பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பறவை ஆர்வலர் ஆகியோர் ஈர நிலங்களுக்கு சென்று கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இந்தப் பணியின் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு அது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு: விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Tiruputhur ,Tamil Nadu ,Sivagangai Forest… ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்