×

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கிறது திமுகவுடன் பிப். 3, 4ம் தேதி மதிமுக கம்யூனிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மத்தியிலோ அல்லது இறுதி வாரத்திலோ வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது.

முதலாவதாக திமுக, காங்கிரசுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது மிகவும் திருப்திக்கரமாக இருந்தாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருந்தார். காங்கிரசுடன் அடுக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 9ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தொடர்ந்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் வருகிற 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து 4ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இதர கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது தமிழக தேர்தல் களத்தில் சூடுகிளப்பியுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கிறது திமுகவுடன் பிப். 3, 4ம் தேதி மதிமுக கம்யூனிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : DMK ,MDMK ,Chennai ,Congress ,Madhyamik ,Liberation Tigers ,CPM ,CBI ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி