×

வேலூர் கோட்டையில் 2 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வேலூர்: வேலூர் கோட்டையில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்துக்கு காரணமான சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை முக்கிய வரலாற்று சின்னமாக விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டவர் என சுற்றுலா பயணிகள் வேலூர் வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை பொறுத்தவரை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

குறிப்பாக வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஓய்வறைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவக வசதி என ஏதும் இல்லாமல் கோட்டைக்குள் அவர்கள் அலைமோதும் நிலை நீடித்து வருகிறது. இதுபற்றி தொல்லியல்துறையோ, சுற்றுலாத்துறையோ கண்டுகொள்ளாத நிலையே இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மத்திய தொல்லியல்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் கோட்டையை ஒட்டுமொத்தமாக பொலிவு பெற செய்வதற்காக 33.2 கோடியில் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இதில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகில் 3 கோடி மதிப்பீட்டில் பழமையை பறைசாற்றும் வகையிலான கட்டமைப்புடன் காபி, தேனீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், பேக்கரி உணவுகளை வாங்கி அருந்தும் வகையில் கேண்டீன் கட்டப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கேண்டீன் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

கோட்டையில் கேண்டீன் காட்சிபொருளாகவே காட்சியளிப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் குடிநீருக்கு தேடி அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறை கோட்டைக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ள கேண்டீனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுடன், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் கோட்டையில் 2 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vellore Fort ,Vellore ,Sepoy Revolution ,India ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...