×

சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்திற்குள் புகுந்து யானை அட்டகாசம்: வீடு சேதம்; மக்கள் பீதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள மலை கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை திம்பம் மலைப்பகுதியில் உள்ள மாவநத்தம் கிராமத்தில் நுழைந்த காட்டு யானை கணேசன் என்பவரது தோட்டத்தின் நடுவே உள்ள வீட்டை சேதப்படுத்தியது. இதில், தகர சீட்டால் ஆன வீட்டின் மேற்கூரையை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. காட்டு யானை வீட்டை சேதப்படுத்துவதை கண்ட கிராம மக்கள், டார்ச்லைட் அடித்தபடி சத்தம் போட்டு காட்டு யானையை விரட்ட முயன்றனர்.

சுமார் அரை மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக மலைப் பகுதியில் உள்ள கிராமங்களான மாவநத்தம், பெஜலட்டி, இட்டறை, தடசலட்டி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்திற்குள் புகுந்து யானை அட்டகாசம்: வீடு சேதம்; மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Satyamangalam ,Tigers Archive ,Erode ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு