×

கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் மீண்டும் பதட்டம் மீனவர்களின் வலைகள், படகு தீ வைத்து எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

 

செய்யூர், ஜன.29: கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீனவர்களின் வலைகள் மற்றும் படகை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் மீனவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஒரு தரப்பு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு தங்களின் மீன்பிடி வலைகளை பத்திரமான இடத்தில் வைத்ததோடு, படகுகளை கரையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அன்று இரவு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் ஒரு படகினை தீ வைத்து எரித்துள்ளனர். இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் தங்களது ரூ.50 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இதனை மர்ம நபர்கள் மீண்டும் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அங்கிருந்த படகு ஒன்றுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையறிந்து அப்பகுதினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால், தீயை அணைக்க முடியாததால் அனைத்து வலைகளும், படகும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் மீண்டும் பதட்டம் மீனவர்களின் வலைகள், படகு தீ வைத்து எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kadapakkam ,Seyyur ,Chengalpattu district ,Fisherman ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...