செங்கல்பட்டு, ஜன. 29: செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று கலெக்டராகப் பொறுப்பு ஏற்கவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக ராகுல்நாத், கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பல்வேறு நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.
இதேபோல், ரூ.129 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, தொல்லியல் துறை பிரச்னையால் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, அக்கட்டிடத்தில் கடந்த 26ம் தேதி (குடியரசு தினம்) முதல் அனைத்து துறை அலுவலகங்களை மாற்றம் செய்து, அங்கு அன்று முதல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் ராகுல்நாத் செயல்பட்டு வந்தார். மேலும், கிளாம்பாக்கத்தில் புதிய நவீன பேருந்து நிலையத்தை திறப்பதிலும், மாமல்லபுரத்தில் சர்வதேச சதுரங்க போட்டியை திறம்பட நடத்தியதில் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு ஒருசில மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில், கடந்த 3 ஆண்டுகளாக புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் 2வது கலெக்டராக பணியாற்றி வந்த ராகுல்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய கலெக்டராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநராக திறம்பட செயலாற்றி வந்துள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டராக அருண்ராஜ் இன்று பொறுப்பேற்பு appeared first on Dinakaran.