×

அரசியலமைப்பு உருவாக்க உத்வேகம் தந்தவர் ராமர்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் உத்வேகமாக இருந்தது ராமரின் ஆட்சி’ என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.2024ம் ஆண்டில் தனது முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலப்பிரதியின் 3வது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, ராமன், அன்னை சீதை, லட்சுமணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள்.

அந்த வகையில், ராமரின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்குக் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தது. அனைவரின் உணர்வையும் ஒன்றாக்கியது. பக்தியை ஒன்றாக்கியது. அனைவரின் வார்த்தையிலும், இதயத்திலும் ராமர் குடிகொண்டார். பலரும் ராம பஜனைகளை பாடி, சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ம் தேதி மாலையில், நாடெங்கிலும் ராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.

இது, தேசத்தின் ஒற்றுமையின் பலமாக பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரம். இந்த முறை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது. இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன. இந்த முறை 13 பெண் தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் சக்திக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில், பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது. இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது. பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டில் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் உருவாகி வருகிறது. இதன் மூலம் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசியலமைப்பு உருவாக்க உத்வேகம் தந்தவர் ராமர்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rama ,PM Modi ,New Delhi ,Modi ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...