×

முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றியதால் படகு சவாரி ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

 

திருப்போரூர், ஜன.28: முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றியதால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுத்துறை உள்ளது. சென்னை மற்றும் புறநகர் மக்களின் வார விடுமுறை தின கொண்டாட்டங்களுக்கு, முட்டுக்காடு படகுத்துறை, கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் ஆகியவை முக்கிய தீர்வாக உள்ளது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மகிழ்வர். இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாத பெய்த மழையின் காரணமாக வானிலை மற்றும் பருவநிலை போன்றவை பெரும் மாற்றத்தை கண்டுள்ளதால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவாரப் பகுதி தற்போது நீர்வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளுடன் காட்சியளிக்கின்றது.

இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள், மோட்டர் ஸ்கூட்டர்கள் போன்றவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அவர்களிடம் தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையினர், இயற்கை சீற்றத்தின் காரணமாக நீர்வற்றி இருப்பதாகவும், ஓரிரு நாட்களுக்கு இந்நிலை நீடிக்கும் என்றும் கூறினர். மேலும், தற்காலிகமாக மோட்டார் படகுகள் இயக்க முடியவில்லை என்றும், பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனால், ஒருசிலர் மட்டும் அந்த மிதி படகுகளை பயன்படுத்தி மகிழ்ந்தனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். உள்ளூர் மீனவர்களிடம் பேசியபோது, ‘‘கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் காரணமாக கடல் அலையில் சீற்றம் காணப்படுகிறது. எனவே மீன்களின் வரத்தும் குறைந்துள்ளது. இது மட்டுமின்றி முகத்துவாரத்தில் இருந்து நீர்வரத்து குறைந்து விட்டதால் கடலுக்கும், முகத்துவாரத்துக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு, முகத்துவாரம் முற்றிலும் வற்றி விட்டது. இதனால் முகத்துவாரம் மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இந்நிலை ஓரிரு வாரங்கள் நீடிக்கும்” என்றனர்.

The post முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றியதால் படகு சவாரி ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Muttukadu estuary ,Tirupporur ,Tamil Nadu Government Tourism Department ,Muttukkadu ,East Coast Road ,Chennai.… ,Muttukkadu estuary ,
× RELATED சித்திரை சுற்றுலா கலை விழா நிறைவு