திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவுக்காக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நேற்று முன்தினம் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 200 கிடாக்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2,500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர். இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம்.
The post 200 ஆடு, 300 கோழிகளை பலியிட்டு கோயிலில் பிரியாணி பிரசாதம் appeared first on Dinakaran.