×

கீழ்வெண்மணி தியாகி பரபரப்பு குற்றச்சாட்டு என்னை பாஜவில் சேர்க்க ஆளுநர் சந்திக்க வருகிறார்: சந்திப்பதில் துளி அளவு கூட விருப்பமில்லை என பேட்டி

நாகப்பட்டினம்: ‘என்னை பாஜவில் சேர்க்க நாகைக்கு என்னை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிறார். அவரை சந்திப்பதில் துளி அளவு கூட விருப்பமில்லை’ என்று கீழவெண்மணி சம்பவ தியாகி பழனிவேல் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (28ம்தேதி) காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர் காரில் திருவாரூர் மாவட்டம் வருகிறார். அங்கு மதிய உணவிற்கு பின்னர் கார் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி தியாகிகள் நினைவு இல்லம் செல்கிறார்.

கீழவெண்மணியில் கடந்த 1968ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை சந்திக்கிறார்.  இந்நிலையில் தமிழக ஆளுநர் தன்னை சந்திப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தியாகி பழனிவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: வர்க்க போராட்டத்தில் நில சுவான்தாரர்களுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன். அந்த போராட்டத்தின்போது ஆதிக்க சக்திகளால் குண்டடிப்பட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன்.

அப்போது எல்லாம் வந்து என்னை சந்திக்காதவர்கள் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக சந்திக்க வருகிறார்கள். என்னை பாஜ கட்சிக்கு இழுப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை வந்து சந்திக்கவுள்ளார். என்னை தமிழக ஆளுநர் சந்திப்பதில் எனக்கு துளி அளவு கூட விருப்பமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* கருப்புக்கொடி போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து கூறுகையில், ‘கீழ்வெண்மணி சம்பவ தியாகியும், மா.கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பழனிவேல் ஆளுநர் தன்னை சந்திக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர் ரவி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கீழ்வேளூர் பகுதி முழுவதும் கருப்பு கொடி காட்டுவதுடன் அங்குள்ள வீடுகள், பனைமரங்கள், சாலையோரங்களில் கருப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்’ என்றார்.

The post கீழ்வெண்மணி தியாகி பரபரப்பு குற்றச்சாட்டு என்னை பாஜவில் சேர்க்க ஆளுநர் சந்திக்க வருகிறார்: சந்திப்பதில் துளி அளவு கூட விருப்பமில்லை என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,BJP ,Kilivenmani Martyr ,Nagapattinam ,Governor RN ,Ravi ,Nagai ,Palanivel ,Keezavenmani ,Kylvenmani Martyr ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...