×

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆச்சு… எய்ம்ஸ்க்கு 2வது செங்கல்லை வைக்க அமைச்சர் யாரையும் அனுப்பலையா…ஒன்றிய அரசை கலாய்த்த மதுரை எம்பி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2வது செங்கல்லை எடுத்து வைக்க எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி கடந்த 27.1.2019ல் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போதும் ஒன்றிய அரசு தரப்பில் 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சுற்றுச்சுவர் கட்டும் பணி கூட முழுமையாக நிறைவடையவில்லை. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி ஐந்தாண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்தாண்டு நிறைவு பெறுகிறது.

இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எய்ம்ஸ் வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அப்போதைய ஆளுநர், அமைச்சர் பங்கேற்றுள்ள நிகழ்வு போட்டோ செய்தி, வீடியோ காட்சிகளையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல், எய்ம்ஸ் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட பல்வேறு ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் ‘தூங்கும் எய்ம்ஸ் திட்டம்’ என கமென்ட் அடித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆச்சு… எய்ம்ஸ்க்கு 2வது செங்கல்லை வைக்க அமைச்சர் யாரையும் அனுப்பலையா…ஒன்றிய அரசை கலாய்த்த மதுரை எம்பி appeared first on Dinakaran.

Tags : Modi ,AIIMS ,Madurai ,unity government ,AIIMS Hospital ,S. Venkatesan ,Union government ,Madurai Thopur ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...