×

5 பேரை வெட்டி 50 சவரன் கொள்ளை

காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (65). மனைவி உபகாரமேரி (60). இவர்கள் தனது மருமகள் மற்றும் பேரன், பேத்திகளோடு வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகைகளை திருட முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த சின்னப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்ததால், அவர்களை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் தம்பதி உட்பட 5 பேரும் மயங்கி விழுந்ததும், பீரோவில் இருந்து 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர். அதிகாலை 5 மணியளவில் கண் விழித்த பேரன், நடந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். 5 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, நேற்று காலை 10 மணியளவில், மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளித்தம்மம் விலக்கு பகுதியில், கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post 5 பேரை வெட்டி 50 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Chinnappan ,Kalluvari ,Kalayarkovil, Sivagangai district ,Upakarameri ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...