×

முக்கிய பிரமுகரை தீர்த்துக்கட்ட இருப்பதாக ஆடியோ வெளியிட்டு ராக்கெட் ராஜா கூட்டாளியை சிக்க வைத்த பெண் தோழி: வைரலாகும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் பரபரப்பு தகவல்கள்

நெல்லை: முக்கிய பிரமுகரை தீர்த்துக்கட்ட இருப்பதாக ஆடியோ வெளியிட்டு ராக்கெட் ராஜா கூட்டாளியை பெண் தோழியே சிக்க வைத்தது குறித்து பரபரப்பை தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை அருகேயுள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜேக்கப் என்ற பிளாக் ஜாக்குவார் (32). இவர், மாற்று சமுதாயத்ைத சேர்ந்த முக்கிய பிரமுகரை கொலை செய்வதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக கைத்துப்பாக்கியுடன் சுற்றி வருவதாகவும் ஜேக்கப்பின் பெண் தோழி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இதனடிப்படையில் தாழையூத்து போலீசார் ஜேக்கப்பை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசாரின் உதவியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது இந்திய ஆயுத தடைச்சட்டம் பிரிவு 25(1) மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திசையன்விளை அடுத்துள்ள ஆனைக்குடிக்கு சென்று அங்குள்ள ராக்கெட் ராஜாவின் வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்து கைத்துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஜேக்கப்பிடம் நடந்த தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் தோழியுடன் இவர் நெருக்கமாக இருந்த காலக்கட்டங்களில் மாற்று சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை தீர்த்துக் கட்ட வேண்டும் என்றும், அதற்காகத்தான் கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்றும் அடிக்கடி கூறி வந்துள்ளார். தற்போது ஜேக்கப்பிற்கும், பெண் தோழிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு மோதலாகி உள்ளது. தோழியை ஜேக்கப் மிரட்டிய நிலையில், அவரை போலீசில் சிக்க வைப்பதற்காக தோழி ஆடியோ வெளியிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆடியோ மற்றும் ஜேக்கப், பெண் தோழியுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. ஆடியோவில் ஜேக்கப் பின் தோழி கூறுகையில், ‘ஜேக்கப், என் வீட்டுக்கு வந்தது நீ. என்னை லவ் பண்ணுனது நீ. என்னோட வீடியோவை போடுறீயா?. நீ நிர்வாணமாக நிற்கும் வீடியோவை போய் பாரு. வீட்டுக்கு வெளியே 3 பசங்க நிக்குறாங்களா… என்னை வெட்டிருவாங்களா… ஏன் நாங்க வெட்ட மாட்டோமா?. துப்பாக்கி வைச்சிக்கிட்டு சுத்துற, நீ என்னை ஓட விடுறேன்னு சொல்றீயே… பாரு, வேண்டாம்னு நான் ஒதுங்குகிறேன். என் சமுதாய தலைவர் ராக்கெட் ராஜா மட்டும்தான். நீ பெரிய ரவுடியா, நானும் பெரிய ரவுடிதான். என்னோட வீடியோவை போட்டு சீன் போடுறீயா, இப்ப டிபார்ட்மென்ட் என்ன பண்ணுது பாரு. நீயா, நானான்னு பார்த்துக் கொள்வோம்’ என்று பேசியுள்ளார். ஜேக்கப் மிரட்டியது தொடர்பாக காவல் துறைக்கு ஆன்லைனிலும் பெண் தோழி புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, கைதான ஜேக்கப்பை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜேக்கப்பை 15 நாள் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜேக்கப்பை சென்னை பூந்தமல்லி சப்-சிறையில் போலீசார் அடைத்தனர்.

* 6 கொலை உட்பட 14 வழக்கு நிலுவை

கைதான ஜேக்கப் மீது நெல்லை, பாளை, தூத்துக்குடி, நாங்குநேரி, சீவலப்பேரி, உவரி ஆகிய காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகே இதுகுறித்த விவரங்கள் தெரிய வருமென போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

* ராக்கெட் ராஜாவை பிடிக்க 2 தனிப்படை

ராக்கெட் ராஜா வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள சில வழக்குகள் தொடர்பாக தலைமறைவாக உள்ள ராக்கெட் ராஜாவை கைது செய்ய நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான 2 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

The post முக்கிய பிரமுகரை தீர்த்துக்கட்ட இருப்பதாக ஆடியோ வெளியிட்டு ராக்கெட் ராஜா கூட்டாளியை சிக்க வைத்த பெண் தோழி: வைரலாகும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Jayakumar ,Jacob ,North Tharyut ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...