×

தேவதானப்பட்டி அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் தீயில் கருகி பலி: கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை

 

தேவதானப்பட்டி, ஜன. 26: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, ரெங்கப்பநாயக்கன்பட்டி, குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சூரியகுமார்(24). இவர் வத்தலக்குண்டில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மகளிர் குழுவில் வசூல் செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகளிர் குழுவில் வசூல் செய்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தவில்லை என குற்றச்சாட்டி சூரியகுமார் மீது இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சூரியகுமாரின் தந்தை பெரியகருப்பன் நிதிநிறுவனத்தில் விசாரித்துள்ளார்.

பின்னர் மகளிர் குழுவிடம் வசூல் செய்த பணத்தை விரைவில் நிதிநிறுவனத்தில் செலுத்தவேண்டும் என தனது மகனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற சூரியகுமார் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பெரியகருப்பன் மகனை காணவில்லை என விருவீடு போலீசில் புகார் அளித்தார்.

சூரியகுமாரை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டி சீவல்கரடு பகுதியில் தீயில் எரிந்து கருகிய நிலையில் சூரியகுமார் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெரியகருப்பன் புகாரில் வழக்கு பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரேனும் கொலை செய்துள்ளனரா என்ற கோனங்களில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தேவதானப்பட்டி அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் தீயில் கருகி பலி: கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Suriyakumar ,Periyakaruppan ,Gunnuthupatti ,Rengapanayakanpatti ,Nilakottai taluk ,Dindigul district ,Vatthalakund ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை