×

கொள்முதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல்லை விற்று பயன் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்றுப் பயன்பெறலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் இன்றுவரை 5,54,874 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 87,811 விவசாயிகளுக்கு ரூ.1,257.81 கோடி அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நெல்வரத்து வர துவங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களிலும் 957 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 195 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் நெல்லை எப்போது கொண்டுவந்தாலும் கொள்முதல் செய்யலாம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டு தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றிற்கு சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.107ம் சேர்த்து ரூ.2,310க்கும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.82ம் சேர்த்து ரூ.2,265க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் (உழவர் உதவி மையம்) 1800 599 3540 மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்பு பதாகையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக திறக்கப்படுவதில்லை என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உடனுக்குடன் திறந்து நெல் கொள்முதல் செய்யப்படும் விவரம் அந்தந்த பகுதி நெல் விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

நேற்று தலைமைச் செயலாளர் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட காவிரிப் பாசன மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவைப்படும் இடங்களில் விரைந்து திறந்து நெல் கொள்முதல் செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்றுப் பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கொள்முதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல்லை விற்று பயன் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,CHENNAI ,Sambha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...