×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி: ரூ.3 லட்சம் முதல்வர் நிதியுதவி

விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் காமராஜ்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பட்டாசுக்கு தேவையான வேதிபொருட்களை கலக்கும் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த 3 அறைகள் தரைமட்டமாகின. அறையில் வேலை பார்த்த கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (23), முதலிபட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த போர்மேன் சரவணக்குமார் (24), இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார் மற்றும் ஆலை மேலாளர் கருப்பசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் கருப்பசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி: ரூ.3 லட்சம் முதல்வர் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Murukesan ,Kamrajpur ,Vachakkarabadi ,Nagpur ,PM ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...