சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் முனைய நுழை வாயில் முன்பு நேற்று பெட்ரோலிய டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடினால் 10 ஆண்டு காலம் சிறை மற்றும் ₹7 லட்சம் அபராதம் விதித்து புதிய கிரிமினல் சட்டத்தை ஒன்றிய பாஜ அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெட்ரோலிய டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த ஊதியம் வாங்கும் ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்தினால் ₹7லட்ச அபராதம் செலுத்த வேண்டும் என சட்டம் இயற்றியதால் ஓட்டுநர்கள் மன உளைச்சல் ஏற்பட்டு அச்சத்துடன் வாகனங்களை இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மோட்டார் தொழிலில் விபத்து என்பது எதிர்பாராத வகையில் நடைபெறும் நிகழ்வு. உடனடியாக ஒன்றிய அரசு ஓட்டுநர்களுக்கு எதிராக இயற்றியுள்ள HIT & RUN சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெட்ரோல், டீசல் ஆயில் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, மாலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
The post ஒன்றிய அரசின் சட்டத்தை கண்டித்து பெட்ரோலிய டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.