×

திருப்போரூர் பள்ளி சத்துணவு கூடத்தில் ஆய்வு 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும்: பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தை பாலாஜி எம்எல்ஏ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சத்துணவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் காலதாமதமாக வந்து சமையல் பணியில் ஈடுபட்டதை கண்டு, அவர்களிடம் தற்போது விரைவில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் சமைத்து உணவு வழங்க வேண்டும். அரசு செய்து வரும் திட்டங்களில் முக்கியமான இந்த திட்டத்தை குறைகள் இல்லாது நிறைவேற்ற ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர், பாலாஜி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் காலை உணவு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளியில் ஆய்வு செய்தபோது, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை எனக்கூறினர். தமிழ்நாடு அரசுக்கு நான் ஒரு கோரிக்கையாக இதை வைக்கிறேன். தற்போது மாணவர்களுக்கு முட்டை போன்ற ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அப்போதுதான் தேர்வுகளை அணுகவும், போட்டித்தேர்வுகளில் கலந்துக்கொள்ளவும் அவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். தற்போது 10ம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு வழங்கப்படுகிறது. 11, 12வது வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவை வழங்க தாயுள்ளம் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்’ என்றார்.

The post திருப்போரூர் பள்ளி சத்துணவு கூடத்தில் ஆய்வு 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும்: பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Balaji MLA ,Tiruporur ,Chief Minister ,Tiruporur government ,Tiruporur Govt.Boys High School Nutrition Center ,Balaji ,Tiruporur School Nutrition Center ,MLA ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை