×

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் பிரச்னைகளை தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், பிரச்னைகளை தீர்க்க இரு நாடுகளுக்கிடையே கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 22ம்தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் பிரச்னைகளை தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Jaishankar ,Chennai ,Jaishankara ,M. K. Stalin ,Nadu ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...