*போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மூன்றரை பவுன் தங்க நகை, 2 செல்போன்களுடன் கேட்பாரற்று கிடந்த பேக்கை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்ஐ அருணோதயம், தனிப்பிரிவு போலீசார் ராஜேஷ் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2வது நடைமேடையில் உள்ள ஒரு இருக்கையில் சோல்டர் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து போலீசார், அந்த பேக்கை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் 2 பவுன் தங்க செயின், ஒன்றரை பவுன் தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்கள், ராம்பிரசாத் குமார் என்ற பெயரில் ஆதார் அட்டையும் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மதுரை திருநகர் சீனிவாசா காலனியை சேர்ந்த ராம் பிரசாத் குமார் (35) என்பவரது பேக் என்பதும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்தில் இருந்து மதுரை வந்த அவர் சாப்பிடுவதற்காக திண்டுக்கல்லில் இறங்கியதும், அப்போது அவசரத்தில் பேக்கை மறந்து வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.பின்னர் போலீசார், பேக் மற்றும் பொருட்களை வாங்கி செல்ல திண்டுக்கல்லுக்கு வரும்படி ராம் பிரசாத் குமாரை அழைத்தனர். அதன்பேரில், ராம் பிரசாத் குமாரின் மனைவி நந்தினி திண்டுக்கல்லுக்கு நேரில் வந்து ரயில்வே போலீசாரிடம் பேக் மற்றும் பொருட்களை வாங்கி சென்றார்.
The post திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மூன்றரை பவுன் நகை, 2 செல்போனுடன் கிடந்த பேக் appeared first on Dinakaran.