×

பரஞ்சேர்வழியில் 2 கோயில்களில் கிபி 11,16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பரஞ்சேர்வழியில் 2 கோயில்களில் கிபி 11, 16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகளை ஆய்வு மையத்தினர் கண்டு பிடித்து வெளிப்படுத்தியுள்ளனர்.
பண்டைய கொங்கு மண்டல 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கேய நாடு ஆகும். இந்த காங்கேய நாட்டில் தொன்மையான ஊர்கள் 12 கிராமங்கள் ஆகும். ஓங்கு புகழோடு விளங்கிய பண்டைய கிராமங்களில் பார்புகழ் பழஞ்சேபளி, என்றும் பரஞ்சேர்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சேர்வழியும் ஒன்று. காங்கேய வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர்வழியில் உள்ள மகாதேவர் நட்டுராமந்தர் என்னும் மத்தியபுரீஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்களில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோயில்களில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி ஆகியோர் மேற்கொண்டனர். ஆய்வின்போது வரலாற்று சிறப்புமிக்க கிபி 11 மற்றும் கிபி 16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் ரவிக்குமார் மேலும் கூறியதாவது:

காஞ்சி மாநதி என்னும் நொய்யல் ஆற்றின் தென் கரையிலும், சிவன்மலையில் இருந்து செல்லும் ஓடையின் வடகரையிலும் அமைந்துள்ள ஊர் தான் பரஞ்சேர்வழி. பண்டைய கொங்கு மண்டலத்தில் சைவ, வைணவ மற்றும் சமணம் என முச்சமயங்களும் தழைத்து வளர்ந்த ஊர் நமது பரஞ்சேர்வழி ஆகும். கிபி 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த கல்வெட்டு உள்ளது. இங்குள்ள மத்திய புரீஸ்வரர் கோயிலின் அம்மன் சன்னதி முன்பு பாதி மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை திருப்பணியின் போது எடுத்து ஆய்வு செய்த போது அதில் கிபி 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த எழுத்துக்களுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

கிரந்த எழுத்து வடமொழிக்கென தமிழர்கள் உருவாக்கியதும், தமிழர்களுக்கே சொந்தமானதும் தான் கிரந்த எழுத்து. இங்கு 220 செ.மீ உயரமும் 50 செ.மீ அகலமும் 20 செ.மீ கணமும் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களின் உயரம் 60 செ.மீ ஆகும்.

இந்த கிரந்த எழுத்துக்களை வாசித்த இந்திய வரலாற்று பேரறிஞர் பேராசிரியர் முனைவர் சுப்பராயலு நான்கு பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்ப திரும்ப வருகின்றன என்றார். பொதுவாக இந்த வகை மந்திரக்கல்லை போற்றி வழிபட்டால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோயை இது குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது இது கிபி 11-ம் நூற்றாண்டை சேர்ந்தது.

கிபி 16-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு: வீர நாராயண பெருமாள் கோயிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துக்கள் இருப்பதை காண முடிந்தது. 80 செமீ உயரமும், 50 செமீ அகலமும் ,20 செ.மீ கணமும் கொண்ட இந்த கல்லில் மூன்று பக்கங்களில் வரலாற்று சிறப்புமிக்க செய்தி இருப்பதை அறிய முடிகிறது. அதேபோல தமிழர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

கோயில்களிலும் இறைவனுக்கு மண் பானையிலேயே அமுது செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவர்களை, வேட்கோவர், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் உடன்கூடிய கல்வெட்டு உள்ளது. இது வேட்கோவர்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தியை கூறுகிறது.

அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணார்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது பரஞ்சேர்பள்ளி வீர நாராயண பெருமாளுக்குத் திருநந்தா தீபம் எரிப்பதற்காகக் கூத்தார் சுங்கம் என்னும் வேட்கோவர் மண்பானை செய்யப் பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை நந்தா தீபம் எரிப்பதற்கு கொடுத்துள்ள செய்தியை நாம் அறிய முடிகிறது. இதன் மூலம் அன்று மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததும் அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது இது கிபி 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பரஞ்சேர்வழியில் 2 கோயில்களில் கிபி 11,16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Parancheravahi ,Tirupur ,Tirupur district, ,Kongu region ,Paranchervai ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...