×

இதுவே கடைசி வாய்ப்பு.. ஜன.29ம் தேதி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் எச்சரிக்கை!!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜனவரி 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், புகார் அளிக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும்வரை, விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க தடை கேட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில் ராஜேஷ் தாசின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜனவரி 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ராஜேஷ்தாஸ் ஆஜராகததை அடுத்து நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 29ம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும். இதுவே கடைசி வாய்ப்பு என்று நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

The post இதுவே கடைசி வாய்ப்பு.. ஜன.29ம் தேதி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Rajeshdas ,Villupuram Primary Sessions Court ,Villupuram ,Principal Sessions Court ,Special ,DGP ,Rajeshtas ,Chief Minister ,Edappadi Palaniswami ,AIADMK ,Tamil Nadu ,Villupuram Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள்...