புதுச்சேரி, ஜன. 24: புதுவையில் திருமண நாளில் 3வது மாடியில் சீரியல் பல்ப் மாட்டிய தனியார் கல்லூரி மேலாளர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை, லதா ஸ்டீல் ஹவுஸ் அருகில் இசிஆர் டெம்பிள் வே அவென்யூவில் வசித்தவர் பாலமுகுந்தன் (56). தனியார் கல்லூரியில் சீனியர் மேலாளர். இவருக்கு அனுராதா (50) என்ற மனைவியும், சுருதி (25) என்ற மகளும் உள்ளனர். சுருதி சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் அங்கேயே தங்கி பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற பாலமுகுந்தன் மாலையில் வீடு திரும்பினார். பின்னர் தனது 26வது திருமண நாளையொட்டி கோயிலுக்கு செல்ல வேண்டுமென மனைவியிடம் கூறி அவரை கிளம்புமாறு கூறியுள்ளார். பின்னர் அவர், சீரியல் பல்ப்பை வீட்டின் 3வது மாடி பால்கனியில் ஸ்டூலில் ஏறி மாட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஸ்டூல் சரிந்த நிலையில் நிலைதடுமாறிய பாலமுகுந்தன் எதிர்பாராதவிதமாக 3வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது காதில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மூச்சு பேச்சின்றி கிடக்கவே உடனே ஜிப்மருக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலமுகுந்தன் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். திருமண நாளில் அவர் இறந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர
The post புதுவையில் திருமண நாளில் 3வது மாடியில் சீரியல் பல்ப் மாட்டிய தனியார் கல்லூரி மேலாளர் விழுந்து இறப்பு appeared first on Dinakaran.