×

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கலெக்டர் ஆய்வு; ஆண்டொன்றுக்கு 9.25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டம்

பெரியபாளையம், ஜன:24: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் தொடங்கப்பட்டுள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்த கோயிலில் ஆண்டொன்றுக்கு 9.25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணிஅம்மன் ஆலயம் உள்ளிட்டவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் விஜயா ஆகியோர் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் இத்திட்டத்தை நேரில் சென்று தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தின்படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆண்டொன்றுக்கு 9,25,600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும், ₹3 கோடியே 65 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள சூழலில் ஐந்தாயிரம் பக்தர்கள் பயனடைவார்கள். இதேபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1,500 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில், இனி வரும் காலங்களில் 2,800 பக்தர்கள் பயனடைவார்கள்.

மேலும் திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் 500 பக்தர்கள் பயனடைந்து வந்த சூழலில் இனி 1,800 பக்தர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பிஜே.மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் வாசுதேவன், கோவில் செயல் அலுவலர் பிரகாஷ், திமுக நிர்வாகிகள் மொய்தீன், சீனிவாசன், முனுசாமி, அப்புன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கலெக்டர் ஆய்வு; ஆண்டொன்றுக்கு 9.25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam Bhavani Amman Temple ,Periyapalayam ,Collector ,Prabhushankar ,Bhavani Amman temple ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்...