×

கோயிலில் ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சர்ச்சை.. பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு..!!

அசாம்: இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் போது அசாம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசவிடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலீசார் தடுப்புகளை அமைத்து தொண்டர்களை தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்திய ஒற்றுமை பயணத்தின் 2வது கட்டமான இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு அசாம் மாநில பாஜக அரசு பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுத்துவதாக காங்கிரஸ் அரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நகூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஜோராபட் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி; ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் காரணமாகவே பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். நான் மாணவர்களை சந்திப்பதை அசாம் முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தடுக்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கேட்க விரும்புவதை கேட்பதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அசாம் முதல்வர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் விதிகளை உடைத்துள்ளனர் என்று அவர் கூறினார். இதை தொடர்ந்து கவுஹாத்தி நகருக்குள் ராகுல் காந்தி பயணம் நுழைய முற்பட்டபோது தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேச விடாமல் தடுப்பதற்காகவே அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். போலீசார் தடுப்புகளை மீறி காங்கிரஸ் தொண்டர்கள் செல்ல முற்பட்டதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

The post கோயிலில் ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சர்ச்சை.. பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rahul ,Rahul Gandhi ,Assam ,Union BJP government ,Assam University ,India Unity Justice Journey ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...